Monday 24 February 2014

தலைப்பில்லா கவிதைகள்..!!!

orphans


தலைப்பில்லா கவிதைகள்... 

புவியெங்கும் விதைத் தூவும் 
வாயுதேவனே . 
இம்மொட்டுகளை விதைத்து யார்...!!!! 

காப்பகத்தில் 
பிஞ்சுகளெல்லாம் கைதிகளாய் 
தீர்ப்பெழுதியது 
காலமும் காமமும் ..!!!! 

சிறைவாசி 
சிறைக் கம்பியை எண்ணுகிறான் 
இப்பூக்களெல்லாம் 
ஜன்னல் கம்பியை எண்ணுகிறது..!!! 

ஒரே கூட்டில் சிறைப்பட்ட 
இக்குஞ்சுளுக்கு... 

தலைசாய்த்திட தாய்மடியில்லை 
தரையே 
தலையணையும் தாய்மடியுமாய்..!!! 

முத்தமிட அன்னையில்லை 
மேககன்னியே 
முத்தமிடும் அன்புத்தாய்..!!! 

உணவும் உறைவிடமும் 
இலவசம் 
உணர்வுகளும் கனவுகளும் 
அடுப்பில்..!!! 

நேசிப்பாரில்லா இம்மலர்களெல்லாம் 
அரசியல்வாதிகளின் 
பிறந்தநாளுக்கு விளம்பரம் 
கட்டணமாய் ஒருவேளை சாப்பாடு...!!! 

கலியுகமிது 
வேலியே பயிறுகளை மேய்கிறது 
வேலியில்லா 
இப்பூந்தோட்டத்தின் நிலையென்ன..!!! 


இல்லையென்று வருந்துவோரெல்லாம் 
வாருங்களிங்கே 
ஆயிரம் குரல்கள் அம்மா என்றழைக்க 
ஆயிரம் கரங்கள் கண்ணீரை துடைக்க..!!! 

வாசிப்போரில்லா 
இம்மழலை கவிதைகளை வாசியுங்கள் 
ஒவ்வொரு கவிதையிளும் 
வாழ்க்கையென்று மறைந்துகிடக்கு...!!!! 

இக்கண்ணீர பூக்களுக்கு 
அன்பை காணிக்கையாக்குங்கள்..!!


--- சுதா --- 

1 comment: